கால் டாக்ஸியில் சென்று பேங்க்கை கொள்ளையடித்த 19 வயது இளைஞர் கைது!
வங்கியில் திருடிவிட்டு கால் டாக்ஸியில் தப்பிச் சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நியூயார்க்: அமெரிக்காவில் கால் டாக்சியில் சென்று வங்கியை கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள எவான்ஸ்வில்லி எனும் ஊரை சேர்ந்த 19 வயது இளைஞர் டெரிக் ஃபேரியா.திருடனான டெரிக் அந்நகரில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டான்.
அதன்படி கடந்த வாரம் அந்த வங்கிக்கு கால் டாக்சியில் சென்ற டெரிக், காசாளரை மிரட்டி பணத்தை கொள்ளையடித்தான். பின்னர் வங்கியில் இருந்து வெளியே வந்த அவன், கால் டாக்சி ஒன்றை புக் செய்து வீடு திரும்பினான். அந்த டாக்சிக்கான கட்டணத்தை கொள்ளையடித்த பணத்தில் இருந்தே எடுத்துக்கொடுத்துள்ளான்.
திருட்டு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியோடு கொள்ளை நடந்த ஒரு மணி நேரத்தில் டெரிக்கை கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அவனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் கால் டாக்சிக்காக செலவிடப்பட்ட அந்த 20 அமெரிக்க டாலரை மட்டும் அவர்களால் மீட்க முடியவில்லை.
கால் டாக்சியில் சென்று வங்கியை கொள்ளையடித்த கொள்ளையன் டெரிக் ஃபேரியா இப்போது எவன்ஸ்வில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பொதுவாக திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது சொந்த வாகனத்தை அல்லது திருடப்பட்ட வாகனங்களையே தப்பிச் செல்ல பயன்படுத்துவர். ஆனால், இவர்களில் இருந்து வித்தியாசப்பட்ட டெரிக், கால் டாக்ஸியில் சென்று போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளான்.