வங்கதேசத்தில் கனமழை... நிலச்சரிவில் சிக்கி 134 பேர் பலி!
வங்கதேசத்தில் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 134 பேர் உயிரிழந்தனர்.
டாக்கா: வங்கதேசத்தில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 134 பேர் இறந்துள்ளனர். நிலச்சரிவில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடலாம் என அஞ்சப்படுகிறது.
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 134 பேர் இறந்துள்ளனர்.
வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ரங்கமதி, பங்கர்பான், சிட்டகாங் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் தலைவர் ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் தேடுதல் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என தெரிகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த 4 வீரர்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்பது சோகம். அங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அதையும் மீறி மீட்புக் குழுவினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் ரியாஸ் அகமது தெரிவித்தார்.