வெளுத்து வாங்கிய மழை.. வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்.. சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
Recommended Video
வெனிஸ் : கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவகையில் இத்தாலியின் பாரம்பரிய நகரான வெனிசில் வரலாறு காணாத மழை மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய இடங்களில் முக்கிய இடமான வெனிஸ், அதன் பாரம்பரிய அழகிற்காக போற்றப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள கலைப்படைப்புகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்டவை இந்த மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெனிஸ் மட்டுமின்றி இத்தாலியின் டோரண்டோ, பிரின்டிசி, மதேரா உள்ளிட்ட பகுதிகளும் கடுமையான மழைப்பொழிவால் நீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய வெனிஸ்
உலகளவில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்துவரும் இத்தாலியின் வெனிஸ் நகரம், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக போற்றப்படுகிறது. இந்த நகரில் அதிகளவில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய பொருட்களை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருவார்கள்.
6 அடி உயரத்திற்கு வெள்ளம்
அங்கு கடந்த 1966ல் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது 50 ஆண்டுகளை கடந்து வரலாறு காணாத மழை மற்றும் அதையொட்டிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வீதிகளில் 6 அடி உயரத்திற்கும் மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளன.
கலைப்படைப்புகள் அழிப்பு
சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம்பியுள்ள வெனிஸ் நகரில் இடம்பெற்றுள்ள கலைப்படைப்புக்கள் அனைத்தும் இந்த மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவை அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்வது இயலாத காரியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு
வெனிஸ் மட்டுமின்றி இத்தாலியின் பல பகுதிகளில் பல அடிகளுக்கும் மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு நீர் டாக்சி மூலம் போக்குவரத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீச்சலடித்து சென்ற பிரான்ஸ் சுற்றுலாபயணிகள்
அங்குள்ள வீதிகளில் நீர் இன்னும் வடியாத நிலையில், பிரான்சிலிருந்து வெனிசிற்கு சுற்றுலா வந்த தம்பதிகள் வெள்ள நீரில் நீச்சலடித்து தங்களது இருப்பிடத்திற்கு சென்றனர். இதனிடையே வெனிசின் புகழ்பெற்ற செயிண்ட் மார்க் சதுக்கம் இந்த வெள்ளத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
மரங்கள் விழுந்ததால் பாதிப்பு
இந்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலியின் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. வரலாறு காணாத இந்த மழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.