2024ல் சீனாவை மிஞ்சி விடுவோமாம்.. எதில் என்று பாருங்கள் மக்களே!
2024ஆம் ஆண்டுக்குள் சீன மக்கள் தொகையை இந்தியா மிஞ்சிவிடும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.
நியூயார்க்: 2012ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 144 கோடியாக இருக்கும் என ஐநா ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவே முதலிடம் வகிக்கிறது. இநநிலையில் 2024ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஐநா சபை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
சீனாவை மிஞ்சும்
அதன்படி 2024ஆம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும் தான் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் என தெரியவந்துள்ளது. அதிலும் சீனாவை விட சற்று அதிக மக்கள்தொகையுடன் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ல் 144 கோடி
ஐநா ஆய்வறிக்கையின் படி தற்போது 141 கோடி மக்கள் தொகை இருப்பதாவும், அதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 134 கோடி மக்கள் தொகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சி 144 கோடியாக இருக்குமாம்.
2015 ஆய்வறிக்கை
கடந்த 2015-ஆம் ஆண்டும் ஐநா, இதே போன்ற புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டிருந்தது. அப்போது, 2022-ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என தெரிவிக்கப்பட்டது
2030ல் 150கோடி
2024-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா, சீனாவில் தலா 144 கோடி மக்கள் தொகை இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2030-ஆம் ஆண்டு 150 கோடி மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும், 2050-ஆம் ஆண்டுவாக்கில் 166 கோடியாக இந்திய மக்கள் தொகை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050க்குப் பிறகு குறையும்
அதேநேரத்தில் 2030-ஆம் ஆண்டிற்கு பின் சீன மக்கள் தொகை மெதுவாக சரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2050க்கு பிறகு இந்திய மக்கள் தொகை குறைய துவங்கும்.
2100ல் 151கோடி
2100ல் இந்திய மக்கள் தொகை 151 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் உலகளவில் மக்கள் தொகையில், இந்தியா முதலிடத்தில் இருக்கும்.