ஆசிய விளையாட்டு போட்டிக்காக தென் கொரியா போன 7 வீரர்களைக் காணவில்லை!
இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தென்கொரியா சென்ற வீரர்களில் ஏழு பேரைக் காணவில்லை என சம்பந்தப்பட்ட நாடுகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தென் கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் உலகின் பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேபாள நாட்டை சேர்ந்த மூன்று வீரர்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்களும், வங்காளதேசம் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த தலா ஒரு வீரரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தென்கொரியா வந்தபோது காணாமல் போனதாக இன்சியான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கூறிய நான்கு நாடுகளின் அணி நிர்வாகிகள் இது தொடர்பாக போட்டிகளை நடத்தும் இன்சியான் நிர்வாகிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் தற்போது காணாமல் போன வீரர்களை இன்சியான் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, காணாமல் போன அந்த ஏழு வீரர்களும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக வேலை தேடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அங்குள்ள இடைத்தரகர்கள் உதவி இருக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரும் அக்டோபர் 19 ந் தேதியுடன் காணாமல் போன வீரர்களின் விசா காலம் முடிவடைவதால், அதன் பிறகு அவர்கள் அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமாக கருதப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற சூழ்நிலை கடந்த 2002ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் போதும் ஏற்பட்டது. அப்போது 16 வீரர்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.