எல்லையில் படைகளை குவித்தது ஏன்? கேள்வி எழுப்பிய இந்தியா.. பதில் அளிக்காத சீனா.. என்ன நடந்தது?
மாஸ்கோ: லடாக் எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருவது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இயிடம் இந்திய தரப்பு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆனால் இதற்கு சீனாவின் தரப்பு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
லடாக் மோதல் இப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எல்லை பிரச்சனை தொடர்பாக நேற்று ரஷ்யாவில் இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இடையே இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் முழுமையாக அமைதியை எட்டும் வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்கிறார்கள்.
லடாக் மோதல்.. ரஷ்யாவில் நடந்த இந்தியா - சீனா பேச்சுவார்த்தை.. 5 உடன்படிக்கைகள் கொண்ட புதிய ஒப்பந்தம்
சில கேள்வி
இதில் சீனாவின் வெளியுறவுத்துறையிடம் இந்திய தரப்பு கடுமையான சில கேள்விகளை எழுப்பி உள்ளது. அதில், எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருவது ஏன்? 1993 மற்றும் 1996ல் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. எல்லையில் சீனாதான் அத்துமீறும் வகையில் செயல்படுகிறது .
பிஎல்ஏ படையினர்
பிஎல்ஏ படையினர் எல்லையில், ஒப்பந்தங்களை மீறும் வகையிலும், இந்திய வீரர்களை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள். எல்லை ஒப்பந்தங்களை இந்தியா எப்போதும் மதித்து வருகிறது. எல்லையில் நிலைமையை மாற்றும் வகையில் இந்தியா இதுவரை செயல்பட்டது இல்லை. இனியும் செயல்படாது. எல்லையில் இருக்கும் இடங்களை, கட்டுப்பாட்டு பகுதிகளை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
அமைதி முக்கியம்
எல்லையில் அமைதியை கொண்டு வருவது மிக முக்கியம். தற்போது நிலவும் சூழ்நிலையை சரி செய்ய உடனடியாக ஒப்பந்தங்கள், தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். எல்லையில் மொத்தமாக படைகளை வாபஸ் வாங்கும் வகையில் தீர்மானங்களை செய்ய வேண்டும், என்று இந்திய தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் இதன் பின் செய்யப்பட்ட 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தத்தில் படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக உறுதியான தீர்மானம் எதுவும் செய்யப்படவில்லை.
பதில் இல்லை
எல்லையில் படைகளை குவித்தது தொடர்பாக சீனா எந்த விதமான பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை. இந்தியாவின் கேள்விக்கு சீனா பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் எல்லையில் இந்திய தரப்பும் அதிக அளவில் படைகளை குவித்து உள்ளது. இந்திய சார்பாக மொத்தம் 50 ஆயிரம் வீரர்கள் வரை எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர். சீனாவின் படை குவிப்பை சமாளிக்கும் வகையில் அதிக அளவில் இந்தியா சார்பாக 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.