சத்யா நாதெல்லா... இவர்தான் மைக்ரோசாப்ட்டின் புதிய பாஸ் - ஆலோசகரானார் கேட்ஸ்!
சிலிக்கன் வேலி: பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய தலைமை செயலதிகாரியைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் பிறந்தவரான சத்யா நடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி தொழில்நுட்ப ஆலோசகர் என்ற புதிய பதவிக்குள் நுழைந்துள்ளார்.
46 வயதில் பெரும் புகழ்
46 வயதுதான் ஆகிறது நடெல்லாவுக்கு. இந்த இளம் வயதில் உலகின் தகவல் தொழில்நுட்பல வல்லாதிக்க சக்திகளில் ஒன்றான மைக்ரோசாப்ட்டின் தலைமைப் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
இதுவரை இருந்தவர் ஸ்டீவ் பால்மர்
இதுவரை மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் பால்மர்.
3வது தலைவர்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 38 வருடங்களாகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்த மூன்றாவது நபர் நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
22 வருடமாக மைக்ரோசாப்ட்டுடன்
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கடந்த 22 வருடங்களாக இருந்து வருகிறார் நடெல்லா.
என்னென்ன வேலை பார்த்தார்...
மைக்ரோசாப்ட் ஆபீஸ், அதன் சர்வர், டூல் உள்ளிட்டவற்றில் பணியாற்றியுள்ளார் நடெல்லா.
ஜான் தாம்சன் - தலைவர்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஜான் தாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மங்களூரில் படித்தவர்
நடெல்லா, மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஆவார். எலக்ட்ரிகல் என்ஜீனியரிங்கில் டிகிரி முடித்த இவர், மாஸ்டர் டிகிரியை விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வர்த்தக மேலாண்மை முதுகலைப் படிப்பையும் படித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்
இளம் வயதில் பள்ளி, கல்லூரி அளவில் கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட்தான் தன்னை ஒரு குழுவாக எப்படி இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவது என்ற தத்துவத்தைக் கற்றுக் கொடுத்ததாக கூறுகிறார் நடெல்லா.