வேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா!
ஜெனீவா: வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்த முடிவை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்பட அனைவரும் வரவேற்றனர் என்றும் இந்தியா கூறியுள்ளது.
டெல்லியில் தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 80 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்தும் விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திஷா ரவி கைது
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல்கள் குவிந்தன. இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலீபா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதே போல் டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக பெங்களூருவை சேர்ந்த சுற்றுச் சூழலியல் ஆர்வலர் 22 வயதான திஷா ரவியை டெல்லி சைபர் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கைதுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
விவசாயிகள் உணர்வை மதிக்கிறது
இந்த நிலையில் வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐநாவின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே கூறியதாவது:- 2024-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்
மூன்று வேளாண் சட்டங்களை இயற்றுவதன் நோக்கம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உணர்ந்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கு உதவும். இது குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளின் போராட்டங்களுக்கு இந்திய அரசு மிகுந்த மரியாதை காட்டியுள்ளதுடன், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்த முடிவை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்பட அனைவரும் வரவேற்றனர்.. இது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது, பல தசாப்த கால பாகுபாடு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கிறது, மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் (டி.டி.சி) மூலம் அங்கு அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளோம் என்று இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.