ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்தனை கோரமுகங்களையும் இந்தியா முழுவீச்சில் அம்பலப்படுத்தியது. பாகிஸ்தானின் மனித உரிமைகளை பட்டியலிட்டு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். செந்தில்குமார்.
ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கிய இந்த கூட்டம் அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரியான தமிழர் செந்தில்குமார் பங்கேற்று பேசியதாவது:
சீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை! மத்திய அரசு அதிகாரியும் பங்கேற்பு
இம்ரான் பாகிஸ்தான் நிலவரம்
இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானில் நீங்கள் வீடு திரும்ப முடியாது என்பதுதான் நிலைமை. பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள், ரகசிய தடுப்பு முகாம்கள், சித்ரவதைகள், காணாமல் போதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தனை கொடூரமான மனித உரிமை மீறல்களையும் பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாக செய்து கொண்டிருக்கிறது.
கில்ஜிட்டில் என்ன நிலைமை
பாகிஸ்தானின் கில்ஜிட், பலுசிஸ்தானில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. பல மாகாணங்களில் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட எந்தவித காரணமின்றி கைது செய்யும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.
இந்து, கிறிஸ்தவ சிறுமிகள் கடத்தல்
பாகிஸ்தானில் தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்து, கிறிஸ்தவ சிறுமிகள் பாகிஸ்தானில் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பத்திரிகையாளர்கள் மர்வேய்ஸ் சர்மா, அகமது நூரானி, புகாரி உள்ளிட்டோர் பாகிஸ்தானில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
திசை திருப்பும் பாக்.
பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் இத்ரிஸ் காணாமல் போய் 9 மாதங்கள் ஓடிவிட்டன. அவரது கதி என்ன என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா குறித்து பொறுப்பே இல்லாமல் அவதூறு பிரசாரங்களை பாகிஸ்தான் மேற்கொண்டு ஐநா மனித உரிமைகள் கவுன்சிலையே திசை திருப்பவும் முயற்சிக்கிறது. ஆகையால் பாகிஸ்தான் தன்னுடைய சொந்த நாட்டில் நடத்தப்பட்டு வரும் அநீதிகளை முதலில் பார்க்க வேண்டும். இவ்வாறு செந்தில்குமார் கூறினார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதியாக தமிழர் டி.எஸ்.திருமூர்த்தி இருந்து வருகிறார். ஐநாவில் இந்தியா புதிய உயரங்களைத் தொடுவதில் திருமூர்த்தி பிரதான பங்களிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.