குல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று சந்தித்தனர். அப்போது குல்பூஷன் ஜாதவ், மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியாவுக்காக வேவு பார்த்தார் குல்பூஷன் ஜாதவ்; அவர் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி என்பது பாகிஸ்தான் குற்றச்சாட்டு. தனிநாடு கோரி போராட்டம் நடைபெறும் பலுசிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குல்பூஷன் ஜாதவுக்கு 2017-ல் பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது.
மேலும் குல்பூஷன் ஜாதவின் தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனிடையே தமக்கான மரண தண்டனைக்கு எதிராக குல்பூஷன் ஜாதவ், அப்பீல் செய்ய மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், குல்பூஷன் ஜாதவை சந்தித்தனர். கடந்த முறை ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்த கெடுபிடி காட்டினர் பாகிஸ்தான் அதிகாரிகள். தற்போதைய சந்திப்பில் இப்படி நிகழக் கூடாது எனவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்கா, பிரான்ஸுக்கு நாளை முதல் விமான சேவை: மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி
ஆனாலும் இன்றைய சந்திப்பிலும் கூட பாகிஸ்தான் அதிகாரிகள் அத்துமீறியே நடந்து கொண்டிருக்கின்றனர். ஜாதவுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் அதிகாரிகள் அருகிலேயே நின்று பேசுவதை பதிவு செய்தனர்; ஒருவிதமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்; ஜாதவ் மன அழுத்தத்தில் இருப்பது வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ளப்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கம் போல தாங்கள் எந்த இடையூறுமே செய்யவில்லை என பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.