உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு... முதலிடத்தில் இந்தியா!
லண்டன்: உலகளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவுகளை ‘தி பவர் ஆப் 1.8 பில்லியன்' என்ற பெயரில் ஐ.நா. அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன் படி, உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் 10 முதல் 24 வயது கொண்ட 356 மில்லியன் இளைஞர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் இளைஞர்கள் தான் எனக் கூறப்பட்டுள்ளது.
2வது இடத்தில் சீனா...
இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. அங்கு 269 மில்லியன் இளைஞர்கள் இருப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்தடுத்த இடங்களில்...
தொடர்ந்து மூன்றாவது, நான்காவது இடங்களில் இந்தோனேசியா (67 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (65 மில்லியன்) உள்ளன.
5வது இடத்தில் பாகிஸ்தான்...
59 மில்லியன் இளைஞர்களைப் பெற்று இந்த பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நைஜிரியா (57 மில்லியன்), பிரேசில் (51 மில்லியன்) மற்றும் வங்காளதேசம் (48 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.
கல்வி, சுகாதாரம்...
மேற்கூறிய நாடுகள் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகமாக முதலீடு செய்கின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்...
இளைஞர்கள் புதுமைகளை படைக்கும் படைப்பாளிகள், எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தலைவர்கள் ஆவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான தகுதிகள்...
ஆனால் அவர்கள் போதிய திறமை வளர்ப்பு, உடல்நலம், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை தொடர்பான உண்மையான தேர்வு ஆகியவற்றை கொண்டிருந்தால் மட்டுமே எதிர்க்காலத்தை மாற்ற முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகத்தான வாய்ப்பு...
மேலும், இன்றைய கணக்கின்படி இருக்கும் 1.8 பில்லியன் இளைஞர்கள் கையில் எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் மகத்தான வாய்ப்பு உள்ளது" என ஐ.நா. நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.