‘இந்தியாவின் மகளு'க்கு தடை... இந்தியாவின் சர்வதேச தற்கொலைக்குச் சமம்: லெஸ்லி உட்வின்
லண்டன்: இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு தடை விதித்திருப்பதன் மூலம் இந்தியா மிகப் பெரிய தவறைச் செய்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் தெரிவித்துள்ளார். மேலும், இது இந்தியா சர்வதேச தற்கொலை செய்து கொண்டதற்குச் சமமானது என அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே அதிர வைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக லெஸ்லி உட்வின் என்ற பெண் இயக்குநர் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதியின் பேட்டி இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்தது மத்திய அரசு.
தடையைத் தொடர்ந்து இந்தியா தவிர மற்ற நாடுகளில் முன்கூட்டியே வெளியிட்டது பிபிசி. இது தொடர்பாக மத்திய அரசு பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்த ஆவணப்பட இயக்குநர் லெஸ்லி உட்வின். அப்போது அவர் கூறியதாவது:-
தடை...
உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவிற்கு எனது நன்றியை தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது.
சர்வதேச தற்கொலை...
நிர்பயாவிற்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போட தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன், படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச தற்கொலை செய்துகொண்டுள்ளது.
மோடியின் கருத்தே...
பிரதமர் மோடி ஒரு மணி நேரம் தனது நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தை பார்த்தார் என்றால் உண்மையை புரிந்து கொள்வார். அவரின் பெண் குழந்தைகளை காப்போம்" என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தை தான் நானும் எனது ஆவணப்படத்தில் முன் வைத்துள்ளேன்' என்றார்.
பிபிசி இணையதளத்தில்...
இந்தியாவில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து இந்த ஆவணப்படம் பி.பி.சி யின் இங்கிலாந்து தளத்தில் பார்க்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.