ஜம்மு காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.. ஐ.நா.வில் மலேசிய பிரதமர் ஷாக் பேச்சு
கோலாலம்பூர்: ஜம்மு-காஷ்மீரில் இந்தியா ஊடுருவி, அதை அத்துமீறி ஆக்கிரமித்து கொண்டுள்ளதாகவும், பாகிஸ்தானுடன் இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உரையாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று, இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் அறிவித்தது.
இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க, பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அதன் பிரதமர் இம்ரான்கான் பேசும்போது, ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகுவதாகவும், சர்வதேச சமூகம் இதில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சீனா எதிர்ப்பு
அதேபோன்று, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி பேசும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்று நடக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் ஏற்கனவே இருந்த நிலையில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
காஷ்மீர் பற்றி பேசாத மோடி
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, வேறு எந்த நாடுமே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது கூட, காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை. இந்த நிலையில், ஐநாவில் பேசிய மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தவறான செயல்
மலேசிய பிரதமர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் ஊடுருவப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு, சில காரணங்கள் இருந்திருக்கலாம் ஆனால் எப்படி இருந்தாலும் அது தவறான செயல். இந்த விவகாரத்தில் ஐநாசபை, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே பாகிஸ்தானுடன் இணைந்து இப்பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதன் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, மகாதீர் முகமது, "பேச்சுவார்த்தை மூலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீர்வை காண வேண்டுமே தவிர, ஆக்கிரமிப்பு மூலமாக கிடையாது" என்று தெரிவித்தார்.
உரசல் தொடர்கிறது
இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இது போன்று ஒரு உரசல் ஏற்பட்டுள்ளது இது முதன்முறை கிடையாது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதபோதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுத்து வரும் இந்திய அரசு, பண மோசடி வழக்கு தொடர்பாக, ஜாகீர் நாயக்கை, மலேசியாவில் இருந்து நாடு கடத்த கோரிக்கை விடுத்தது. ஆனால் கடந்த 17ஆம் தேதி மலேசிய பிரதமர் அளித்த பேட்டியில், மோடி அவ்வாறு ஒரு கோரிக்கையைவிடுக்கவில்லை என்று தெரிவித்தார். ஜாகிர் நாயக் விவகாரத்துக்கு பிறகு இப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், மலேசியா இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மலேசியாவில் நிலைப்பாட்டால் ஆத்திரம் அடைந்துள்ள இந்திய நெட்டிசன்கள், மலேசியாவை, புறக்கணியுங்கள் என்று பொருள்படும் வகையில் #BoycottMalaysia என்ற ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வந்தனர்.