இந்தியா- ஜப்பான் இடையே வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா – ஜப்பான் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று டோக்கியோவில் கையெழுத்தானது.
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபேக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த வளர்ச்சித் திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம்- பாதுகாப்பு உறவுகள் மேம்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிக நிறுவனங்களை தொடங்க வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே, இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும் சில பிரச்னைகளை களைவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக அந்த ஒப்பந்தம் இதுநாள் வரை கையெழுத்து ஆகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இரு நாட்கள் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி வர்த்தக மாநாடுகளில் கலந்து கொண்டார். முன்னதாக அந்த நாட்டு மன்னர் அகிட்டோவையும் சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் ஜின்சோவை சந்தித்துப் பேசியபோது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தூய்மையான பசுமையான உலகை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவாருப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை ஜப்பான் வழங்கும். அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை ஜப்பான் இதுவரை வழங்கியது இல்லை. அந்த பெருமை இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அண்டைநாடான சீனாவுடன் இருநாடுகளும் இணக்கமாக செல்லும் வாய்ப்பும் எற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது புகுசிமாவில் அணுசக்தியால் பேரழிவு ஏற்பட்டது. இருப்பினும் அணுசக்தி விநியோக சந்தையில் ஜப்பான் முன்னிலையில் இருந்து வருகிறது.