இந்தியா-ஜப்பான் இடையே விரைவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்
இந்தியா –ஜப்பான் இடையே இவ்வார இறுதிக்குள் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றப்பயணமாக இந்த வாரம் டோக்கியா செல்கிறார். அப்போது, வளர்ச்சித் திட்டங்களுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவதுடன் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணுசக்தி நிறுவனங்களை அமைக்க வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வளர்ச்சித் திட்டங்களுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஓப்பந்தம் ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் இந்நாள் வரை அந்த நடவடிக்கை முடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணம் செய்வதை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அணுசக்தி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு ஜப்பான் வழங்கும். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெடுத்திடாத நாட்டிற்கு ஜப்பான் அணு சக்தி தொழில் நுட்பத்தை இதுவரை வழங்கியதில்லை. அந்த வகையில் அணு சக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தொழில் நுட்பத்தை பெரும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு வந்து சேரும்.
இந்தியா அணு சக்தி சோதனை நடத்தினால் அணு சக்தி ஓத்துழைப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவும் இரு நாடுகளும் ஓப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற 11-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.