ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி... ஆப்கனை 'ஆப்' செய்து விட்டு இந்தியா போட்டி!
ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவியிலிருந்து இந்தியாவின் பணி முடிந்து ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், மீண்டும் உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த உறுப்பினர் பதவியானது 2021-22ம் ஆண்டுக்கானது. முதலில் இந்தப் பதவிக்கு ஆப்கானிஸ்தான் மனு செய்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் விலகியிருக்கிறது. இதையடுத்தே இந்தியா போட்டியிட களத்தில் குதித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி கூறுகையில், நாங்கள் போட்டியிட மனு செய்துள்ளோம். தேர்தல் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்றார்.
கடைசியாக 2011-2012 ஆண்டுக்கான உறுப்பினர் பதவியை இந்தியா வகித்தது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இந்தியா கேட்டுக் கொண்டதால்தான் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் காபூலில் ரகசியப் பேச்சுக்கள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானி்ஸ்தான் விலகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.