செம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை
Recommended Video
பீஜிங்: இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இணைந்து, வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் பாகிஸ்தான் மறைமுகமாக கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷியா, சீனா ஆகிய தெற்காசியாவின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின்வூஜென் நகரில் நடைபெற்றது.
இதில், இந்தியா சார்பில், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்று உரையாற்றினார்.
தீவிரவாதிகளே இலக்கு
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலை அவர் எடுத்துரைத்தார். தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக, ஐநா மற்றும் பிற நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எதிரிகள் நாட்டின் ராணுவம் எங்கள் இலக்கு அல்ல என்றும், தீவிரவாத அமைப்புகள் தான் இந்தியாவின் இலக்கு என்றும், இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ள சூழ்நிலையில் அவர்கள் மீதான நடவடிக்கை என்பது இந்தியாவுக்கு அவசியப்படுகிறது என்றும் வலியுறுத்தி பேசினார்.
தீவிரவாதத்திற்கு ஆதரவு
இதன்பிறகு மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில், தீவிரவாதம் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பது, அவற்றில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது
இரு நாடுகள் எல்லை பிரச்சினையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது. சர்வதேச நாடுகளின் விதிமுறைகளின்படி, இதுபோல தீவிரவாதத்திற்கு உதவி செய்வோர் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் இப்போது உள்ள சூழ்நிலையில், மறைமுகமாக பாகிஸ்தானை சுட்டிக்காட்டி தான் இந்த அறிக்கையின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கைவிட்ட சீனா
பாகிஸ்தானின் நட்பு நாடாக சீனா இருந்தாலும் கூட, இந்த கூட்டறிக்கையில் மறைமுகமாக பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய வரிகள் இடம்பெற்றுள்ளன என்பது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நேற்று அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக ராணுவ ரீதியில் பதில் சொல்வதை தவிர்த்து விட்டு, உங்கள் நாட்டிலுள்ள தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்க முற்படவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாகவே குட்டு வைக்கப்பட்டிருந்தது.
சிக்கலில் பாகிஸ்தான்
இந்தநிலையில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மறைமுகமாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சர்வதேச நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் இழந்துவிட்டது. பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சியில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.