கூடங்குளத்தில் 5,6 வது அணு உலை அமைக்கப்படும்.. இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க இந்தியா -ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செயின்ட்பீட்டர்ஸ் பர்க்: கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பது உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் கையெழுத்தானது.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி 4 நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருதரப்பு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதில் முக்கியமாக கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே அங்கு 2 அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன. 3, 4-வது அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
பின்னர் இருநாட்டு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதை தடுக்கும் விவகாரத்தில் அர்ப்பணிப்பை பகிர்ந்து உள்ளன என இருதரப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா, ரஷ்யா இடையே 70 ஆண்டுகளாக வலுவான உறவுகள் உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது விரிவடைந்து உள்ளது. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது பற்றி அதிபர் புதினுடன் ஆலோசனை செய்தேன். பாதுகாப்பு துறையில் இருதரப்பு உறவும் மிகவும் வலுவாகி உள்ளது. இரு நாடுகளிடேயே சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகள் தளர்த்தப்படும் என்றார்.