எப்போ திருட்டுப்போன சிலை இப்போ திரும்ப கிடைச்சிருக்கு!
லண்டன்: இந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன வெண்கலத்தால் ஆன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை பிரிட்டன் போலீசார் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.
1961-ம் ஆண்டு வெண்கலத்தால் ஆன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த 14 புத்தர் சிலைகள் திருட்டுப்போனது. அந்த சிலைகள் பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடுபோன சிலைகளிலிருந்து ஒரே ஒரு புத்தர் சிலை மட்டும் பல நாடுகளில் பல பேர் கை மாறி இறுதியில் லண்டனுக்கு சென்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு இருக்கும் கலை மற்றும் பழம்பொருட்கள் கூடத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது. அந்த சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலை என்று தெரியாமலேயே அது ஏலத்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, இந்த வெண்கல புத்தர் சிலை இந்தியாவின் நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு போலீசாரும், இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரும் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, இந்த சிலையை இந்தியாவுக்கு திரும்ப மீட்டு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்பு இந்த சிலையை லண்டன் நகரின் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சட்டரீதியாக மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த புத்தர் சிலை நேற்று லண்டனில் நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின்போது, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின்காவிடம் முறைப்படி
ஒப்படைக்கப்பட்டது.