370 பிரிவு குறித்து இந்தியாவின் முடிவு.. காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.. பாக். அதிபர்
இஸ்லாமாபாத்: 370 சட்டப்பிரிவு நீக்குவது என்பது காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையையும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அது மூன்றாக பிரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு பாகிஸ்தான் அதிபர் டுவிட்டரில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு- காஷ்மீரின் அந்தஸ்தை மாற்ற இந்தியா முயற்சித்து வருவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரானது. அத்துடன் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.
India's attempt to further change status of Indian Occupied Jammu & Kashmir is against the resolutions of UNSC & against wishes of the Kashmiri people. Pakistan supports & insists on a peaceful resolution based on wishes of Kashmiri people & stands with them in their hour of need
— The President of Pakistan (@PresOfPakistan) August 5, 2019
காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமைதியை விளைவிக்கும் தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்தால் பாகிஸ்தான் ஆதரிக்கும். அதுதான் பாகிஸ்தானின் விருப்பம் கூட. உற்ற நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் துணை இருப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் அவசர அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.