செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய முதல் ஆசியநாடு இந்தியா: சீனா புகழாரம்
பெய்ஜிங்: ‘மங்கள்யான்' செயற்கைக் கோளை அனுப்பியதன் மூலம், செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக சீன விஞ்ஞானிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று முந்தினம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ‘மங்கள்யான்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா.
இதனை பாராட்டும் வகையில், செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் சீனாவை விட இந்தியா முன்னோக்கி செல்கின்றது என்று சீன பத்திரிக்கையில் முதல் பக்க செய்திகள் வந்துள்ளன. மேலும், அதில் அந்நாட்டு விஞ்ஞானிகளின் கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
அதில், சீனா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது...
உலக அரங்கில்....
செவ்வாய் கிரகத்திற்கு ஆசியாவிலேயே முதன்முதலில் மங்கள்யான் செயற்கைக்கோளை ஏவி இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது உலக அரசியல் வட்டாரத்தில் இந்தியாவிற்கு செல்வாக்கை கொண்டு வந்துள்ளது. இந்த சாதனையை உலக நாடுகள் வாழ்த்துகின்றன.
சாதனை....
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் செயற்கைக்கோள் இணைந்து விட்டால், அது டோக்கியோவில் இருந்து அடிக்கப்படும் கோல்ப் பந்தானது பாரிசில் உள்ள துளையில் வந்து விழுவதற்கு நிகரான ஒரு சாதனையாகும்.
மாற்றம்....
இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்படுமானால், மனிதகுலத்திற்கு புதிய தகவல்களையும், நமது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரும்.
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்...
சீனர்களை போன்றே, இந்திய மக்களும் விண்வெளி பற்றிய ஆய்வை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிடாமல், இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒத்துழைப்பு....
மனித குலத்திற்கு சொந்தமான விண்வெளியில் அமைதி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.