நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!
காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை தங்களுக்கு சொந்தமானதாக அறிவித்திருக்கிறது நேபாளம்.
இந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு
நேபாளம்- சீனா
இதனால் இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சீனா, நேபாளத்தை வளைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடனான மோதல் போக்கால் நேபாள பிரதமர் கேபி ஒலிக்கு உட்கட்சியிலேயே நெருக்கடியும் அதிகரித்தது
பாதுகாப்பு அமைச்சர் இலாகா பறிப்பு
இதனையடுத்து நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்பு துறையை பறித்து அதிரடி காட்டினார் பிரதமர் ஒலி. இவர்தான் இந்திய ராணுவத்தில் உள்ள கூர்க்கா பிரிவினரை இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று தூண்டிவிட்டார். இதனிடையே இந்திய ராணுவ தளபதி நரவனே, நேபாள பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ரா தலைவரின் நேபாள பயணம்
இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை வகுக்கும் அமைப்பான 'ரா' பிரிவு தலைவர் சமந்த் குமார் கோயல் காத்மாண்டு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரை பிரதமர் கேபி ஒலி சந்தித்து பேசினார். சிறப்பு விமானம் மூலம் காத்மாண்டு சென்ற சமந்த் குமார் கோயல், அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தியூபா, முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரா தலைவர் சந்திப்பால் சர்ச்சை
இச்சந்திப்புகள் நேபாள அரசியலில் புயலை கிளப்பி உள்ளன. இந்திய ரா அமைப்பின் தலைவருடன் பேசிய விவரங்களை பிரதமர் ஒலி பகிரங்கப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஜலநாத் கனால், மாதவ் குமார் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் துணை பிரதமர்களான பீம் குமார் ராவல், நாராயண் காஜி உள்ளிட்டோரும் கேபி ஒலியை விமர்சித்துள்ளனர்.