இளைஞர்களே இந்தியாவின் பலம்... ரியாத்தில் மோடி புகழாரம் !
ரியாத்: இளைஞர்கள் தான் இந்தியாவின் பலம் என்று பிரதமர் நரேந்திர மோடி ரியாத்தில் நடந்த விழாவில் இந்தியர்களிடையே தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம், அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக இன்று சவுதி வந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரியாத் நகரம் சென்ற பிரதமர் மோடியை இளவரசரும் ரியாத் கவர்னருமான பைசல்பின் பந்தர் பின் அப்துல்லாஜிஸ் வரவேற்றார்.
பின்னர் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜீசை மோடி சந்திக்கிறார். தொடர்ந்து மோடி அங்குள்ள தொழில் நிறுவன முதலாளிகள், இந்திய தொழில் முனைவோர், டாடா கன்சல்டன்சி மையம், என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், ரியாத் நகரில் இந்தியர்களிடையே நரேந்திர மோடி பேசியதாவது: உலக நாடுகளில், இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இளைஞர்களால், இந்தியாவின் வளர்ச்சி மேம்பட தொடங்கியுள்ளது. அவர்களால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை கிடைத்துள்ளது.
உலக நாடுகள் இந்தியாவை அதிகம் கவனிக்கின்றன. மிக குறுகிய காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் உலகிற்கு இந்தியா அதிகமான பங்களிப்பை அளிக்கிறது. இளைஞர்களே இந்தியாவின் பலம். இளைஞர்களால் இந்தியாவுக்கு பெருமை என்றும், நாட்டின் வளர்ச்சி மேம்பட அவர்களே முதன்மைக் காரணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.