சலுகையில்லை, ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராவது இந்தியாவின் உரிமை: மோடி தடாலடி பேச்சு
பாரீஸ்: உலக அமைதிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ‘இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெறுவது அதன் உரிமையாகும்' என்று பிரதமர் மோடி உறுதியாக பேசினார்.
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று இரவு, பிரான்ஸ்வாழ் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா தியாகம்
முதலாவது உலகப்போரில் இருந்தும், ஐ.நா. அமைப்பு அமைக்கப்பட்ட பின்னரும் இந்தியா உலகின் அமைதிக்காக பெரும் தியாகங்களை செய்து உள்ளது. உலகம் முழுவதும் அமைதிப்படைக்கு இந்தியா பெரும் பங்காற்றியது. இப்போது, இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி கேட்டு வருகிறது.
ராணுவத்தினர் உயிர் தியாகம்
முதல் உலக போரில் இந்தியா, 75 ஆயிரம் ராணுவ வீரர்களின் உயிரை தியாகம் செய்தது. இப்போது, அமைதிப்படையின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்துகிறேன்.
காந்தி, புத்தர் விருப்பம்
இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து என்பது, மகாத்மா காந்தி மற்றும் கவுதம புத்தர் ஆகியோரது உணர்வுகளின் உரிமையாகும். இந்தியா கெஞ்சிய நாட்கள் எல்லாம் போய்விட்டது. தற்போது எங்களுடைய தேசம் அதனது உரிமையைதான் கேட்கிறது. நாங்கள் சலுகை கேட்கவில்லை, உரிமையைத்தான் கேட்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது 70வது ஆண்டு தினத்தை கொண்டாடும் போது இதனை நினைவில் கொள்ளும் என்று நம்புகிறேன்.
பிரான்சை வீழ்த்துவோம்
உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். நாங்கள் எங்களுக்காக மட்டுமில்லாமல், உலக அமைதிக்காகவும், உயிர் தியாகம் செய்த நாட்டுக்கு சொந்தக்காரர்கள். இந்தியாவை முன்னெடுத்து செல்லவே பிரான்ஸ் வந்துள்ளேன். வளர்ச்சிப் பாதையில் பிரான்ஸ் நாட்டை இந்தியா பின்னுக்கு தள்ளும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு, இந்தியாவில் விரைவில் வறுமை ஒழிக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.
சிறப்பான பேச்சு என பாராட்டு
முன்னதாக, முதல் உலகப்போரின்போது, பிரான்சில் வீர மரணம் அடைந்த 10 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக லில்லி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மேலை நாட்டில் மோடி மிகவும் வலுவாக இந்திய நிலைப்பாட்டை எடுத்து வைத்ததாக சர்வதேச ஊடகவியலாளர்கள் பாராட்டியுள்ளனர்.