கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்
டாக்கா: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளை வாங்க பாகிஸ்தான் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியில், 20 லட்சம் டோஸ் பங்களாதேஷுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் தயாரிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள், சிறப்பு வசதிகள் கொண்ட விமானம் மூலம் வரும் நாளை (ஜன.20) டாக்கா கொண்டுவரப்பட உள்ளதாக வங்கதேசம் உறுதி செய்துள்ளது.
சிறப்பு விமானம் மூலம்
இந்த தடுப்பூசிகள் டாக்காவில் உள்ள இந்திய ஹை கமிஷன் மூலம் வங்கதேச அரசிடம் ஒப்படைக்கப்படும். வங்கதேசத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 7,900 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு
பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, அவசரகால பயன்பாட்டிற்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை பெற பாகிஸ்தான் ஆராய்ந்து வருகிறது. பாகிஸ்தானில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட, கிட்டத்தட்ட 11,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் ஆலோசனை
தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி (GAVI), CEPI மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கோவாக்ஸ் (Covax) மூலம் தடுப்பூசிகளை பெறலாமா என்பது குறித்து இஸ்லாமாபாத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பதட்டச் சூழல்
கோவாக்ஸ், பாகிஸ்தான் உட்பட சுமார் 190 நாடுகளில் 20 சதவீத மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் தொடக்கத்திற்குப் பிறகு கோவாக்ஸிடமிருந்து மருந்துகளை பெற முடியும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.
இந்தியா தருமா
ஆனால், மீதமுள்ள மக்களுக்கு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்-ஐசிஎம்ஆரின் கோவாக்சின் ஆகியவற்றை பாகிஸ்தான் நம்பி இருக்கிறது. அதேசமயம், இந்தியா தயாரித்த தடுப்பூசிகளை மூன்றாம் நாடுகள் மூலம் பாகிஸ்தான் வாங்க முடியும், ஆனால் அதற்கான செலவுகள் அதிகரிக்கும்.
இரு நாடுகளின் பூசல்
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை பாதித்திருந்தாலும், "உயிர் காக்கும் மருந்துகள்" வழங்குவதற்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.