இந்திய துணை தூதருக்கு கைவிலங்கா?: அமெரிக்க தூதரிடம் இந்தியா கண்டனம்!
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகேட், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
புகாரையடுத்து, தேவயானி கோப்ரகேட்டை மீது விசா மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் தேவயானி தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும்போது போலீசார் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தனர்.
இதனிடையே தேவயானி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பிணைத் தொகையில் அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
இதுகுறித்த தகவலறிந்ததும், இந்திய தூதரக அதிகாரி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, தேவயானி துணைத் தூதர் அந்தஸ்தில் இருப்பவர் என்றும், இவ்விவகாரத்தில் மென்மையான போக்குடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி நான்சி பாவலை நேரில் வரவழைத்து, துணைத் தூதர் அந்தஸ்தில் இருக்கும் தேவயானியை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, அவரை நடத்தியவிதம் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக்கூறி, கடும் கண்டனம் தெரிவித்தது.
தேவயானி வேலைக்கு அமர்த்திய பெண்ணின் பெயர் சங்கீதா ரிச்சர்ட். குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்வதற்காகவும், இவருக்கு மாதம் ஒன்றுக்கு 4,500 டாலர் சம்பளம் அளிப்பதாக வேலை ஒப்பந்தத்தில் கூறி விசா பெற்று அமெரிக்காவுக்கு வரவழைத்ததாகவும், ஆனால் அவருக்கு மாதச் சம்பளமாக வெறும் 537 டாலர்கள் மட்டுமே கொடுத்து, அமெரிக்க தொழிலாளர் சட்டவிதிகளுக்கு மாறாக வாரம் ஒன்றுக்கு 40 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே தேவயானி உடனடியாக கைது செய்யப்பட்டார். தேவயானி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.