சீன எதிர்ப்பை மதிக்காத ரஷ்யா.. ரூ.38,900 கோடியில் இந்தியாவிற்கு வரும் போர் விமானம், ஏவுகணை சிஸ்டம்
மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து 12 சுகோய் போர் விமானங்கள், 21 மிக் -29 போர் விமானங்களையும், ஏவுகணை சிஸ்டம்களையும் விரைந்து வாங்க இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிரடியாக ஒப்புதல் அளித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.38,900 கோடியாகும். சீனாவின் எதிர்ப்பை மீறி ரஷ்யா இந்த தளவாடங்களை இந்தியாவிற்கு வழங்க உள்ளது.
Recommended Video
சீனாவுடன் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக இந்தியாவுக்கு உரசல் நீடிக்கும் நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள 59 மிக் -29 விமானங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு அமைச்சக, பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சக அறிக்கை இன்று தெரிவித்துள்ளது.
திடீரென ரஷ்யா சப்போர்ட்.. யுன்எஸ்சியில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும்.. அதிர்ச்சியில் சீனா!
ரஷ்ய அதிபருடன் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாட்மிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மோடியுடனான பேச்சின்போது, "இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற பங்காளித்துவத்தை அனைத்து துறைகளிலும் மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை புடின் மீண்டும் வலியுறுத்தினார்" என்று இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவு எவ்வளவு
ரஷ்யாவிலிருந்து மிக் -29 விமானங்கள் கொள்முதல் மற்றும் மேம்படுத்தலுக்கு ரூ.7418 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, சுகோய் போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) 10,730 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யும்.
ராஜ்நாத்சிங் பயணம்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு சென்று அங்குள்ள மூத்த அரசு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்த நிலையில், ஒரு வாரம் கழித்து 33 விமானங்களுக்கு இந்தியா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான ஆயுத சிஸ்டம்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்கும் பணிகளை ரஷ்யா வேகப்படுத்தும் என்று தனக்கு உறுதியளிக்கப்பட்டதாக ராஜ்நாத்சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.
சீனா எதிர்ப்பு
இந்தியாவுக்கு உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டாம் என்று சீனா, ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து வருவதாக சில செய்தி வந்த நிலையில் போர் விமானங்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.
ஏவுகணைகள்
விண்வெளியில் பார்வைக்கு அப்பாலும் சென்று தாக்கும், 248 அஸ்ட்ரா, ஏவுகணைகளை விமானப் படை மற்றும் கடற்படைக்கு வாங்குவது, நிலத்திலிருந்து சுமார் 1000 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.