இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு
ஜெனீவா: காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்து புதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாலஸ்தீன வரைவு
"கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும்" என்று பாலஸ்தீன் கொண்டு வந்த வரைவுக்கு ஆதரவாக இந்த நாடுகள் வாக்களித்துள்ளன.
29 நாடுகள் ஆதரவு
46 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், 29 நாடுகள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதில் ஐரோப்பிய நாடுகள் முக்கியமானவை.
அமெரிக்கா எதிர்ப்பு
இஸ்ரேலின் நீண்ட கால நட்பு நாடாக விளங்கும், அமெரிக்கா மட்டுமே, இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
இந்தியா கோரிக்கை
"இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. இந்த சண்டை காரணமாக பல உயிர்களும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் நாசமாகியுள்ளதற்காக இந்தியா வருத்தப்படுகிறது" என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை விவாதத்தில் பேசிய இந்தியாவுக்கான ஐநாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி தெரிவித்தார்.
பின்புலம்
இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட 680 பாலஸ்தீனியர்கள் மற்றும் 31 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமானதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் கொண்டு வந்தது. முன்னதாக இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வை எட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் முன்வரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.