டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு சொல்கிறார் லாரா
துபாய்: டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நடைபெறும் இந்தியா, கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடரில் லாரா விளையாடி வருகிறார். அப்போது துபாய் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த லாரா, சொந்த நாட்டில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.
இங்குள்ள ஆடுகளங்களை இந்திய வீரர்கள் நன்கு அறிந்தவர்கள். மேலும், சிறந்த அணிக்கெதிரான அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பதே எனது கணிப்பு. ஆனால், மேற்கிந்திய அணியைப் பற்றியும் நான் கூற வேண்டும். அவர்கள் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்கள்.
எனவே மற்ற அணிகளுக்கு இது கவலையளிப்பதாகவே அமையும். கிறிஸ் கெய்ல், டேரன் பிராவொ, பொலார்ட் உள்ளிட்டவர்கள் இணையும்போது அவர்களிடையே கெமிஸ்ட்ரி உள்ளது. இவர்கள் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்த இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றி உத்வேகத்துடன் உள்ளது. இதையடுத்து இலங்கை உடனான போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் தயாராகி வருகின்றனர்.