25 பேரை பலி கொண்ட காபூல் குருத்வாரா பயங்கரவாத தாக்குதல்- இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனம்
காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் 25 பேரை பலி கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குருத்வாரா மீதான கொடூர தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு எதிராக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. சுமார் 20,000 உயிர்கள் கொரோனாவால் பலி கொள்ளப்பட்டிருக்கிற பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த எண்ணிக்கை பல லட்சங்களாக அதிகரிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆகையால் யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்து வருகிறது.
ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குருத்வாரா மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று கொடூர தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய நாட்டவர் உட்பட 25 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினய் குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.