மாலி ஹோட்டல் தாக்குதலில் இந்திய அமெரிக்க பெண் அனிதா தட்டார் பலி
வாஷிங்டன்: மாலி நாட்டு ஹோட்டலை சிறை பிடித்த தீவிரவாதிகளுக்கும், மீட்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இந்திய அமெரிக்கர் அனிதா தட்டாரும் ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், மாலி தாக்குதலில் பலியானவர்களில் அமெரிக்கக் குடிமக்கள் ஒருவர் மட்டுமே. அவர் இந்திய அமெரிக்கர் அனிதா தட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், அனிதா தட்டாரின் மரணத்திற்காக நாங்கள் துயரப்படுகிறோம். அவருக்காக இரங்குகிறோம். மாலி தாக்குதலில் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் நாங்கள் அனுதாபப்டுகிறோம் என்றார்.
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக துணை நிற்கும் மாலி மக்களுக்கு நன்றி என்றும் கெர்ரி தெரிவித்துள்ளார்.
அனிதாவின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மாலியின், பமோகாவில் உள்ள ரேடிசன் புளூ ஹோட்டலைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்த 170 பேரை சிறை பிடித்தனர். இதில் 22 பேர் இந்தியர்கள் ஆவர். சிறை பிடிக்கப்பட்டவர்களில் 27 பேரை தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர்.
22 இந்தியர்கள் உள்பட மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த துயரத்தைத் தொடர்ந்து மாலி அரசு பத்து நாள் அவசர நிலையை தனது நாட்டில் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அல்ஜீரியாவை ஆட்டிப்படைத்து வரும் தீவிரவாதி மோக்தர் பெல்மோக்தர் தலைமையிலான அல் முரபுதியான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.