இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதீப் குப்தா சான் பிரான்சிஸ்கோ மேயராக தேர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீப் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 8ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டனர். இதில் குடியரசு கட்சி, 276 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து அமெரிக்காவின் 46வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீப் குப்தா என்பவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு சான் பிரான்சிஸ்கோ நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரதீப் குப்தா, சென்னை ஐஐடியில் படித்தவர். அமெரிக்காவின் புர்து பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பட்ட மேற்படிப்பையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர். பொறியாளரான இவர் அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்.
பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராக பணியாற்றி வந்த பிரதீப், சான் பிரான்சிஸ்கோ நகர கவுன்சில் உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். துணை மேயராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட குப்தா தற்போது மேயராகி உள்ளார். கலிஃபோர்னியாவின் குப்பர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளி பெண்ணான சவிதா வைத்தியநாதன் அண்மையில் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.