வயிற்றில் இருந்த பெண் சிசுவைக் காப்பாற்ற மாமியாரைக் கொன்ற இந்தியப் பெண் விடுதலை
நியூயார்க்: தன் கர்ப்பத்தில் இருந்த பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்ததாக கைது செய்யப் பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண் பல்ஜிந்தர் கவுர்(39). ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பல்ஜிந்தர் இரண்டாவது முறையாக கருத்தரித்தார்.
அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பெண் தான் என்பதை அறிந்த அவரது 68 வயது மாமியார், அதை கலைத்து விடும் படி பல்ஜிந்தரை வற்புறுத்தியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பல்ஜிந்தர் அவரது மாமியாரைக் கொலை செய்து விட்டார்.
பல்ஜிந்தர் கடந்த 26-10-2012 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அவரிடம்.போலீஸ் நடத்திய விசாரணையில், வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காக்கவே தனது மாமியாரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார் பல்ஜிந்தர். இதற்கிடையே சிறையிலேயே அவருக்கு பிரசவமும் நடந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பெண் கருவின் உயிரை காப்பாற்ற நடைபெற்ற இந்த கொலையை தற்காப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என நீதிபதிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட பல்ஜிந்தர் கவுர், பிறந்த வீட்டு தரப்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.