நாகலாந்தில் ரகசிய தீவிரவாத பயிற்சி மையம்... திட்டமிட்டு தாக்கி அழித்தது இந்திய ராணுவம்
மணிப்பூர்: தனிநாடு கேட்டு நாகலாந்தில் ஆயுதம் ஏந்தி போராடி வரும் நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) பிரிவினைவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய ராணுவ வீரர்கள் நேற்று தாக்கி அழித்தனர்.
தனி நாகாலாந்து நாடு கோரி நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) அமைப்பு போராடி வருகிறது. மாசே துங்கின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தனி நாடு அமைய வேண்டும் என்றும் கோரி தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மணிப்பூரின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், அஸ்ஸாமில் நாகா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்
இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் அருகே கெக்ரு நாகா என்ற கிராமத்தில் ரகசியமாக தீவிரவாத பயிற்சி முகாம் நடத்தி வருவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த முகாமைச் சேர்ந்தவர்கள் அருகில் இருந்த கிராமத்தினரை மிரட்டி பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பயிற்சி முகாமை சுற்றி வளைத்த ராணுவத்தினர், அந்த முகாமை மொத்தமாக அழிக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று அந்த முகாம்மை ராணுவத்தினர் தாக்கி அழித்தனர்.
அந்த முகாமில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், எம்-16 ரக அமெரிக்க துப்பாக்கிகள், தீவிரவாதிகளின் சீருடைகள், ஷூக்கள் என பலவற்றை கைப்பற்றினர்.