எவரெஸ்ட்டில் சிக்கி உயிரிழந்த 22 மலையேற்ற வீரர்களின் உடல்கள்.. இந்திய ராணுவம் மீட்டது
காத்மாண்ட்: நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலை பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்களை இந்திய ராணுவத்தார் மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. இது மலையேற்றக் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைச்சிகரத்திலும் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்தது.
கடும் பாதிப்பைச் சந்தித்த நேபாளத்திற்கு பல்வேறு நாடுகளும் மீட்புப் பணியில் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்தவகையில், இந்திய ராணுவத்தினர் மெற்கொண்ட மீட்புப் பணியில் 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன.
மேலும், காயமடைந்த நிலையில் 61 பேர் மீட்கப் பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே, எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது அங்கு பனிப்பாறைகள் சரிந்துள்ளதால் அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமே மீட்க முடியும்.
அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர்கள் பலரும் எவரெஸ்ட்டில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கா ஹெலிகாப்டர் வழங்க முன்வந்துள்ளது.