அளவுக்கு அதிகமான எடை... ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது?
மஸ்கட்: ஓமன் நாட்டின் கடல் பரப்பில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உயிர் சேதம், பொருட்சேதம் பற்றிய தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவைச் சேர்ந்த அந்த சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து 69 வாகனங்கள் (எந்த வகை வாகனங்கள் என தெரியவில்லை), உணவுப் பொருட்கள், டயர்கள் மற்றும் என்ஜீன் ஆயில் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏமன் நோக்கிச் சென்றுள்ளது.
அளவுக்கு அதிகமான எடை ஏற்றியதன் காரணமாக, ஓமன் கடல்பரப்பில் வந்தபோது, திடீரென சரக்கு கப்பல் நீரில் மூழ்க தொடங்கியது. இதையடுத்து, ஓமனை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அந்நாட்டு கடலோர காவல்படையினர் போராடி, கப்பலில் இருந்த ஊழியர்கள் 11 பேரை உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது. எனினும், சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கூடுதல் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.