இந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்
லண்டன்: லண்டனில் இந்திய தூதரகத்தின் முன் பாகிஸ்தானியர்கள் முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய நிலையில் அங்கு குவிந்த இந்தியர்கள் அதனை ஒற்றுமையை இணைந்து சுத்தம் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி நீக்கியது. அத்துடன் அம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தேசிய கொடியை கிழித்து ஆவேச முழக்கம் எழுப்பினர். மேலும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி, இரண்டாவது முறையாக இந்திய தூதரகம் மீது பாகிஸ்தானியர்கள் சிலர் முட்டைகள்,அழுகிய தக்காளிகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது இதன்பின்னர் இந்தியா தூதர் ருச்சி கன்ஷியாமுடன் தூதரகம் முன் திரண்ட இந்தியர்கள், துடைப்பம் உள்ளிட்டவற்றை கொண்டு தூதரகத்தை சுத்தம் செய்தனர்.
தூதரகம் முன் போராட்டம் நடத்தியவர்களை சிசிடிவி காட்சி வைத்து லண்டன் போலீசார் முட்டை வீசியவர்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தூதர் கன்ஷியாம், இதுபோன்ற அச்சுறுத்தலை கண்டு இந்தியர்கள் பயப்படமாட்டோம் என்றும் தங்களை வெறுப்போருக்கு இந்தியா எப்போதும் அன்பை மட்டுமே வழங்கும் என்றும கூறியிருந்தார்.
இதனிடையே கடந்த 3ம் தேதி நடந்த போராட்டத்தை போல், பாகிஸ்தானியர்கள் வருகிற 14ம் தேதியும் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.