பாஸ்போர்ட், விசா குறை தீர்ப்பு முகாம்... சான் அண்டோனியோவில் இந்திய தூதரகம் நடத்துகிறது!
ஹூஸ்டன்(யு.எஸ்): ஹூஸ்டனில் இயங்கும் இந்தியத் தூதரகத்தின் சார்பில், சான் அண்டோனியோ நகரில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
மே13, சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, ரேமண்ட் ரஸ்ஸல் பார்க்கில் இந்த முகாம் நடைபெறும்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடிமக்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்று விட்டவர்கள், இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுப்பதற்கான விண்ணப்பம், ஓசிஐ (OCI card) அட்டைக்கான விண்ணப்பம், இந்திய விசாவுக்கான விண்ணப்பம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கலாம்.
அதே போல் இந்திய பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களையும் தக்க துணை ஆவணங்களுடன் பரிசீலனைக்கு கொண்டுவரலாம்.
விண்ணப்பங்களைப் பரிசீலித்து அங்கேயே ஒப்புதல் வழங்கப்படும் , அதை ஹூஸ்டனில் உள்ள காக்ஸ் & கிங்ஸ் க்ளோபல் சர்வீசஸ்(CKGS) அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன் மூலம் விண்ணப்பங்கள் முன்னதாகவே சரிபார்க்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றன. கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
முகாமுக்கான ஏற்பாடுகளை சான் அண்டோனியோ குஜராத்தி சமாஜ், தூதரகத்துடன் இணைந்து செய்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஹூஸ்டன் இந்திய தூதரகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-இர தினகர்