பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருதை வென்றார் அமெரிக்க வாழ் தமிழர் பழனி குமனன்
வாஷிங்டன்: பத்திரிகை துறைக்கான உயரிய புலிட்சர் விருதை, கோவையை சேர்ந்த பழனி குமனன் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சமீபத்தில் 'மெடிகேர் அன்மாஸ்க்ட்' என்ற பெயரில் புலனாய்வு தொடர்களை வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் மருத்துவத் துறை, மருத்துவக் காப்பீடு போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து வெளியிட்டது அந்த பத்திரிகை.
இன்சூரன்ஸ் மூலமாக 43 மில்லியன் மூத்த குடிமக்களும், 9 மில்லியன், மாற்று திறனாளிகளும் பயன்பட்டுவரும் நிலையில், இந்த புலனாய்வு கட்டுரைகள், அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கையை எடுத்துள்ள அரசு, முறைகேடுகளை களைய முழு வீச்சில் குதித்துள்ளது.
சுமார் 880,000 மருத்துவ சேவை நிறுவனங்களுக்கு, அரசு அளித்த நிதியை, தெரிந்துகொள்ளும் வகையில் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை ஒரு சாப்ட்வேரை உருவாக்கியது. இதை உருவாக்கியது கோவையை பூர்வீகமாக கொண்ட பழனி குமனன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பிஎஸ்ஜி கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தவர். இந்த சாப்ட்வேர் மூலம், ஆயிரக்கணக்கான மருத்துவ ஆவணங்களை பொதுமக்கள், எளிதாக பார்க்கவும் விவரங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.
எனவே, வால்ஸ்டிரீட் ஜர்னலுக்கான புலிட்சர் விருதை பழனி குமனனுன் பகிர்ந்து கொள்கிறார்.