இந்திய மருத்துவர் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் இன்னொரு இனவெறி சம்பவம்?
டெட்ராய்ட்: அமெரிக்காவின் கார் நகரமான டெட்ராய்ட்டில் இந்திய மருத்துவர் ராகேஷ் குமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காரின் பயணிகள் சீட்டில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டார்.
ஹென்றி ஃபோர்டு மருத்துவமனையில் சிறுநீரகத் துறையில் ராகேஷ் பணியாற்றி வந்தார். கேரளாவில் அமிர்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். ராகேஷின் தந்தை நரேந்திர குமாரும் அமெரிக்காவில் பிரபல மருத்துவர்.
நரேந்திர குமார் , இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர்கள் கழகத்தின் தலைவராக இருந்தவர். இது மிகவும் பிரபலமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும்.
சம்பவத்தன்று ராகேஷ் குமார் மருத்துவமனைக்கு செல்லவில்லை. மருத்துவமனையிலிருந்து அவருடைய தந்தையை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். தந்தை மகனை தொலைபேசியில் அழைத்துள்ளார். எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார்.
பதில் ஏதும் இல்லாததால் மகனின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கும் அவர் இல்லாததால் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு , நெடுஞ்சாலையில் உள்ள ஒய்வெடுக்கும் இடத்தில்(Rest Area),காரின் பயணிகள் சீட்டில் ராகேஷ் பிணமாக கண்டுபிடிக்கப் பட்டார்.
கார் கண்டு பிடிக்கப்பட்ட இடம் டெட்ராய்ட்டிலிருந்து 90 மைல்கள் தாண்டி உள்ளது. கார் ராகேஷுடையதா அல்லது வேறு யாருடையது என்ற தகவல் தெரிய வரவில்லை.
வேலைக்கு செல்ல வேண்டியவர் ஏன் 90 மைல்களுக்கு அப்பால் பிணமாக கிடந்தார். அவருடன் கூடச் சென்றவர் யார், சென்ற இடத்தில் வாக்குவாதமா, பயணிகள் சீட்டில் ஏன் இருந்தார் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
போலீசார் , சம்பவம் குறித்து எந்த யூகங்களையும் இதுவரை சொல்லவில்லை. இந்த கொலை இனவெறியால் அல்ல என்று நம்புவதாக தந்தை நரேந்திர குமார் கூறியுள்ளார்.
பத்து டாலர் கேட்டு இல்லையென்றால் கூட துப்பாக்கியல் சுட்டுப் போட்டுவிட்டு போகும் நபர்களும் அமெரிக்காவில் சில இடங்களில் இருக்கிறார்கள். சாலை யில் யாரவது மறித்து பணம் கேட்டால் இருப்பதை கொடுத்து விட்டு போய்விடுங்கள் என்ற அறிவுரை கூறப்படுவதுண்டு.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியர்கள் கொலை சம்பவங்கள் அனைத்தும் இனவெறியுடன் சம்மந்தப் படுத்தியே பேசப்படுகிறது. உண்மையான காரணங்கள் வேறாக இருந்தாலும் அவை வெளிவருவதில்லை.
ராகேஷ் குமார் கொலையில் தந்தையே இது இனவெறி கொலை அல்ல என்று கூறியிருக்கிறார். அவர் அவ்வளவு திட்டமாக கூறியிருப்பதைப் பார்த்தால் இது முன்பகை காரணமாகவும் இருக்கலாம் அல்லது பணத்திற்கான கொலையாகக் கூட இருக்கலாம்.
போலீஸ் விசாரணையில் உண்மை வெளி வரும் என நம்பலாம்.