500 ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ2.5 கோடி மோசடி செய்த இந்தியருக்கு சவூதி போலீசார் வலை
ஜெட்டா: உணவு மற்றும் இருப்பிட வசதி செய்து தருவதாக ஹஜ் பயணிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் வரை ஏமாற்றிப் பணம் பறித்த இந்தியரை சவுதி போலீசார் தேடி வருகின்றனர்.
இசுலாமியர்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது. அவ்வாறு ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்களுக்கு மினா நகரில் தங்கும் கூடாரங்கள் அமைத்து தருவதாகவும், இலவச உணவு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றி பணம் பறித்தது அம்பலமாகி யுள்ளது.
அந்நபர் கிட்டத்தட்ட 500 பயணிகளிடம் சுமார் 15 லட்சம் ரியால் பணம் இவ்வாறு ஏமாற்றிப் பறித்துள்ளார். அது இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் ஆகும். ஏமாற்றப் பட்டவர்கள் ஜெட்டா போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். பணத்தை ஏமாற்றிய நபர் தற்போது செல்போனை அணைத்து வைத்து விட்டு தலைமறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மோசடி பேர்வழியை நம்பி பணம் கட்டிய யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின் போது தங்குவதற்கும், உண்பதற்கும் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் புகார் அளித்துள்ள போலீசார், 'ஹஜ் பயணிகளிடம் மோசடி செய்த ஆசாமி மக்காவுக்கும் ஜெட்டாவுக்கும் இடையே எங்காவது பதுங்கி இருப்பான். எங்கள் பார்வையில் இருந்து தப்பி அவன் சவுதியை விட்டு வெளியேற முடியாது' எனத் தெரிவித்துள்ளனர்.