உளவு விவகாரம்.. இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாக். உத்தரவு
இஸ்லாமாபாத்: உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மெகமூத் அக்தர். இவர் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை உளவு பார்த்து வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே அவரை மத்திய உளவுத்துறை கண்காணித்து வந்ததையடுத்து, டெல்லி, சாணக்யாபுரி காவல் நிலையத்தில் புகாராக அளித்தது.
இதையடுத்து, போலீசார் அதிரடியாக மெகமூத் அக்தரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் வரை படங்கள், இந்திய படைகளின் நடமாட்டம், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த தகவல்கள், உள்துறை அமைச்சர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் உள்பட முக்கிய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட அதிகாரி மெகமூத் அக்தர் வெளிநாட்டு துதரக அதிகாரிக்கான சிறப்புச் சலுகை பெற்றிருந்ததால் நீண்ட விசாரணைக்கு பின்னர் போலீஸ் அவரை விடுவித்தனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.