அமெரிக்காவில் ஹேக் செய்யப்பட்ட இந்திய தூதரக டெலிபோன் சிஸ்டம்.. அமெரிக்க வாழ் இந்தியர்களே உஷார்!
வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்து டெலிபோன் சிஸ்டத்தில் ஊடுருவல் செய்யப்பட்டு, தூதரக அதிகாரிகள் பேசுவதை போல அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மோசடிக்கு முயற்சிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்திய தூதரகத்தின் டெலிபோன் எண்ணில் இருந்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலருக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. அதில் பேசிய மர்ம நபர், உங்கள் பாஸ்போர்ட்டில் பிரச்சினையுள்ளது, விசாவில் வில்லங்கம் உள்ளது என்றெல்லாம் ஏதேதோ காரணங்களை கூறியுள்ளார்.
பிரச்சினைகளை சரி செய்யாவிட்டால் இந்தியாவுக்கு நீங்கள் அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த நபர்கள் எச்சரித்துள்ளனர்.
விஷயம் தெரிந்தது
தொலைபேசி அழைப்பை எதிர்கொண்ட சில அமெரிக்கவாழ் இந்தியர்கள், இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு அதை கொண்டுவந்தனர். அப்போதுதான், தங்களது தூதரக டெலிபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் அறிந்தனர். இதுகுறித்து அமெரிக்க அரசிற்கு, இந்திய தூதரக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். மேலும், தனிப்பட்ட வகையில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சுற்றறிக்கை வெளியீடு
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஒரு அறிவுரையையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில், "எங்கள் தொலைபேசி அழைப்பில் இருந்து உங்களுக்கு யாராவது போன் செய்து கிரெடிட் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்டால் கொடுக்காதீர்கள். பாஸ்போர்ட்டில், விசா விண்ணப்பத்தில் பிரச்சினை உள்ளது என்றெல்லாம் கூறி பணம் கேட்டால் வழங்கிவிடாதீர்கள்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் போதும்
உங்களது ஆவணங்களில் ஏதேனும் நிவர்த்தி தேவைப்பட்டால், கூடுதல் விவரம் தேவைப்பட்டால், அதை தூதரகம் தனது இ-மெயில் மூலமாக கேட்கும். இ-மெயிலில் பதில் அளித்தால் போதும். பணம் செலுத்துதல் உள்ளிட்ட அழைப்புகளுக்கு யாரும் ஊக்கம் தந்துவிடாதீர்கள் என்றும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடிகள் அதிகம்
டெலிபோன் நம்பர்களை ஹேக் செய்யும் டெக்னாலஜி எளிதாகிவிட்டதால், இதுபோன்ற அழைப்புகளை யார் செய்தார்கள் என்பதை அறிவது மிகவும் கஷ்டமானது என்கிறார்கள் அதிகாரிகள்.