வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவும் அமீரக வாழ் இந்தியர்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் மாநிலத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உதவ முன்வந்துள்ளனர்.
அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று அங்கு அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம், கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய ராணுவம் மற்றும் அந்த நேரத்தில் ஹாட்லைன்களை அறிமுகப்படுத்திய இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக இந்திய தூதரகத்திடம் எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர். ஷெட்டி ஆகியோர் ரூ. 1 கோடியும், ஷம்ஷீர் நிறுவனத்தின் துணை தலைவர் ரூ. 25 லட்சமும் அளித்தனர்.
அமீரகத்தில் வசிக்கும் ஜிப்ரான் மாண்டூ என்பவர் தனது மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஜம்மு காஷ்மீர் வந்து பலரை காப்பாற்றியுள்ளார். அவர் கூறுகையில், காஷ்மீரில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து திட்டமிட அமீரகத்தில் வசிக்கும் காஷ்மீர் மக்கள் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்றார்.