பாக். நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை.. துபாயில்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் ஒரு இந்தியர், தனது பாகிஸ்தான் நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் துப்பாக்கியால் சுட்டு தண்டனைடைய நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
துபாய் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணும் இந்தியர்தான். மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கும், பிலிப்பைன்ஸ் பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார் மனைவி. இதனால் கோபமடைந்த கணவர் மனைவியைக் கொலை செய்து விட்டார். இதற்கு அவரது பாகிஸ்தான் நண்பரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த இந்தியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவரை ஏக்யூ என்றும், பாகிஸ்தான் நண்பரை ஆர்ஏ என்றும் துபாய் போலீஸார் கூறியுள்ளனர். இந்தக் கொலை 2013ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதை தற்போது துபாய் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அல் புக்கா என்ற பகுதியில் இந்தக் கொலை நடந்தது. மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதும், தனது பாகிஸ்தான் நண்பருடன் சேர்ந்து உடலை பெரிய பையில் அடைத்து தூக்கி் போட்டுள்ளார் ஏக்யூ.
இந்த விவகாரம் குறித்து ஏக்யூவின் தந்தை கூறுகையில், எனது மகன் குறித்து எனது மருமகள் தொடர்ந்து எனக்குப் போன் செய்து புகார் கூறி வந்தார். தன்னை கணவர் ஏமாற்றி விட்டதாகவும், பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் கூறி வந்தார். ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவுக்கு எனது மகன் போவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
தற்போது ஏக்யூ மற்றும் ஆர்ஏ ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளனர்.