ஓமனில் நடந்த இந்திய திருவிழா: வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்
சூர்: ஓமன் நாட்டின் சூர் பகுதியில் நடைபெற்ற இந்திய திருவிழாவை இந்தியர்கள் மட்டும் அல்லாது ஓமனை சேர்ந்தவர்களும் கண்டு ரசித்தனர்.
ஓமனில் இந்திய திருவிழா கடந்த 15-ஆம் தேதி மஸ்கட்டில் தொடங்கியது. இந்த திருவிழா ஓமன் நாட்டின் சூர், சலாலா, சோகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி இந்திய திருவிழாவானது சூர் பகுதியில் நடைபெற்றது. இந்த திருவிழாவினை மஸ்கட் இந்திய தூதரகத்தின் அதிகாரி குளோரியா காங்க்டே தொடங்கி வைத்தார்.
அவர் தனது உரையில், இந்திய கலை, கலாச்சாரத்தை இந்திய மக்கள் மட்டுமல்லாது ஓமன் நாட்டைச் சேர்ந்த மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழா சிறப்புடன் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சூர் பகுதியின் துணை வாலி அகமது அலி அல் சாகி கூறியதாவது, ஓமன் நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் இடையிலான உறவு நூற்றாண்டு பழமையானது. இரு நாட்டுகளுக்கும் இடையில் வர்த்தகம் மட்டுமல்லாது கலை, கலாச்சார உறவுகளும் பாரம்பரியமானது. இந்த பகுதியில் இந்திய திருவிழா நல்ல முறையில் நடக்க தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.
கொல்கத்தாவின் கிரித்தால் குழுவின் இந்திய பேலட் நடனம் அப்போது இடம் பெற்றது. இதில் பங்கேற்ற நடனக் குழுவினர் சிறப்பான வகையில் நடனம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. இந்திய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் கொண்ட நடனங்கள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தக்கூடியதாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த திருவிழாவில் இந்திய சமூகத்தினர் மட்டுமல்லாது ஓமனைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.