மனதை தூய்மையா வச்சுக்கோங்க டிரம்ப்... 6000 'கிரீன் டீ' பாக்கெட்டுகளை அனுப்பிய இந்திய நிறுவனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு, 'மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் டிரம்ப்' எனகூறி இந்திய நிறுவனம் ஒன்று 6000 கிரீன் டீ பாக்கெட்களை அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக வரும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளார். பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான டிரம்ப் மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த தேயிலை நிறுவனம் ஒன்று டொனால்ட் டிரம்பின் மனதைத் தூய்மைப்படுத்த 6000 'அஸ்ஸாம் கிரீன் டீ' பாக்கெட்டுகளை இலவசமாக அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: "இந்தியாவில் இருந்து வணக்கம் டிரம்ப், நாங்கள் உங்களுக்கு மிக அதிகமாவே இயற்கையான கிரீன் டீ பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளோம். கிரீன் டீயானது உடலில் உள்ள தீய நச்சகளை அழிக்கும் தன்மை கொண்டது. இது மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தை திரும்ப பெற உதவுகிறது. மேலும் இது மனிதர்களை சிறந்தவர்களாக மாற்றுகிறது.
தயவு செய்து, உங்கள் நலனுக்காகவும், அமெரிக்காவின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காகவும் கிரீன் டீ அருந்துங்கள் டிரம். உங்களை நீங்களே தூய்மைப்படுத்துவதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை. டொனால்ட் டிரம்ப்பால் மொத்த உலகமும் கவலையடைந்துள்ளது. அவரை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்ற போதிலும், அவரை எங்களால் மாற்ற முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த தேயிலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷா கூறியதாவது: டிரம்க்கு அனுப்பியுள்ள கீரின் டீ நான்கு ஆண்டுகளுக்கு போதுமானது. கிரீன் டீ மூலமாக டிரம்ப் மாற்றம் அடைவார் என நாங்கள் நம்புகிறோம். இதனால் அவரது நாடு மற்றும் உலகத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மை ஏற்படும். அவருக்கு மேலும் கிரீன் டீ தேவையென்றால் நாங்கள் மகிழ்சியுடன் வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.