பக்ரைனில் தவிக்கும் 18 தமிழக மீனவர்கள்: நாடு திரும்ப இந்திய தூதரகம் உதவுமா?
மனாமா: பக்ரைன் நாட்டில் தவித்துவரும் தமிழக மீனவர்கள் 18 பேர், இந்தியா திரும்புவதற்கு உதவுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்ரைன் நாட்டில் உள்ள மீன்பிடி நிறுவனங்களில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் கடந்த வாரம் அங்கு கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர் தாமஸ் கிளிட்டஸ் சூசை என்பவர் கடற் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பக்ரைன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் 18 தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்ப முடிவு செய்தனர். ஆனால் அவர்களது பாஸ்போர்ட்டை அந்த கம்பெனி நிர்வாகம் தரமறுத்துவிட்டது.
மீனவர்கள் தவிப்பு
இதனால் மீனவர்களின் பிரதிநிதிகள் அங்குள்ள இந்திய தூதர் மோகன் குமாரை சந்தித்தனர். தங்களது பாஸ்போர்ட்டுகள் கம்பெனி நிர்வாகத்திடம் இருப்பதாகவும், கம்பெனிக்கும், தங்களுக்கும் சட்டபூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பட்டினி போட்ட நிறுவனம்
கடந்த 2 நாட்களாக தங்களுக்கு கம்பெனி நிர்வாகம் உணவு எதுவும் வழங்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனவே தூதரகத்தில் இருந்து ஒரு பிரதிநிதியை தங்களுடன் அனுப்பி, தங்களது பாஸ்போர்ட்டுகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்திய தூதரகம் உதவி
அவர்கள் எவ்வளவு விரைவாக தகுந்த ஆவணங்களுடன் வருகிறார்களோ அவ்வளவு விரைவில் அவர்களை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க இந்திய தூதரகம் தயாராக இருப்பதாக குமார் அவர்களிடம் தெரிவித்தார்.
பக்ரைனில் பணியாற்றும் இந்திய மீனவர்கள் ஒரு வாரத்திற்குள் தங்களை இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தூதர் குமார் கூறியுள்ளார்.
சட்டப்பூர்வ ஆவணங்கள்
இதேபோல பல இந்திய மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தூதரகத்தில் பதிவு செய்வது பற்றி கவலைப்படுவதில்லை. இது மிகவும் தவறானது. சட்டபூர்வ ஆவணங்கள் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆவணங்கள் இல்லாமல் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் செய்ய முடியாது என்றும் இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.