மஸ்கட், கத்தார், அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
மஸ்கட்: மஸ்கட், கத்தார், அல் அய்ன் ஆகிய இடங்களில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மஸ்கட்டில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதிதாக இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ள இந்திர மணி பாண்டே தூதரக வளாகத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அல் அய்ன்
15.08.2015 அன்று அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் 69வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்மையத்தின் தலைவர் திரு. ஜாய் தனங்காடன் தேசிய கோடியேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் துணைச் செயலாளர் நாச்சிக்குளம் திரு. அசாலி அஹமது அப்துல் சுக்கூர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட இந்திய சமூக மையத்தின் முன்னால் தலைவர்களும், பொதுச் செயலாளர்களும் இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும், இன்னுயிர் தந்த தியாக வீரர்கள் பற்றியும் உரையாற்றினர்.
வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் இந்திய அமீரக மாண்புகள் குறித்தும் உரை நிகழ்த்தினர். பெரும் திரளாக வந்திருந்த அல் அய்ன் வாழ் இந்திய சமூக மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக 14.08.2015 அன்று மாணவர்களுக்கான கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் மையத்தின் துணைத் தலைவர் திரு. தஷ்வீர் நன்றி கூறினார்.
கத்தார்
கத்தார் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய கலாச்சார மையத்தில் இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்திய தூதர் சஞ்சிவ் அரோரா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். தேச பக்திப்பாடல்களை பள்ளி மாணவ, மாணவியர் பாடினர். விழாவில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், இந்திய சமுக்கத்தினர் பங்கேற்றனர்.