இந்திய தூதரகத்திற்கு உளவு பார்த்ததாகக் கூறி அமீரகத்தில் இந்தியருக்கு 5 ஆண்டு சிறை
துபாய்: அமீரகத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவர் அமீரகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் அபுதாபியில் உள்ள துறைமுகங்களில் ராணுவ கப்பல்களின் புழக்கம் குறித்த ரகசிய தகவல்களை அங்கு இருக்கும் இந்திய தூதரகத்திடம் அளித்துள்ளார்.
ராணுவ ரகசியத்தை இந்திய தூதரகத்திடம் தெரிவித்த மனார் அப்பாஸ் மீது உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அபுதாபியில் உள்ள உச்ச நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. தண்டனை காலம் முடிந்ததும் அப்பாஸ் நாடு கடத்தப்படுவார். அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.